இது நான் A/L பரீட்சை முடிந்தபின் ஆங்கில வகுப்பொன்றுக்கு சென்று ஒரு நியாயமான காரணத்துக்காக சற்றுத் தாமதமாக வந்ததற்காக என் பெற்றோர் , குறிப்பாக என் தாய் என்னிடம் “எங்கே போனாய் ?” என்று கேட்ட அந்த ஒரே ஒரு கேள்வியின் வார்த்தைகளுக்காகவல்ல , அது கேட்கப்பட்ட பாணியில் நான் இதயம் உடைந்து தேம்பித் தேம்பி அழுது தீர்த்தபின் எழுதுயது.
நான்
அழுத கண்ணீர்
சத்தமின்றி
அடங்கிப் போகிறது .
உலகையே எனக்குள்
குடியமர்த்தத் துடித்த
என் மனதை
கேள்விக்கணையால்
குத்திக் கிழித்துவிட்டீர்களே .
நான் பல யுகங்களை
விலைக்குவாங்கத் துடிக்கிறேன் .
என் பெற்றோரே , - நீங்கள்
ஏன் என்னை
பாடப் புத்தகத்துக்குள்
பத்திரப்படுத்தப் பார்க்கிறீர்கள் ?
என் இலட்சியங்கள்
உயர்வானவை .
நான் வானத்தை அளந்து
வான்முகிலாக
ஆசைப்படுகிறேன்.
நீங்களோ
கூட்டுக் கிளிபோல
என்னை
குறுகச் சொல்கிறீர்கள் .
“ நீ பெண் பிள்ளை ”
உங்கள் தலைமுறையில்
நீங்கள் கேட்ட
அதே வார்த்தையை
உங்கள் பிள்ளையிடம்
அப்படியே ஒப்புவிக்கிறீர்களே ,
இதுவென்ன நியாயம் ?
நான் பறக்க விரும்புகிறேன் .
சிறகுகளைத் தரவேண்டிய நீங்களே
எனையேன்
சிறையிருக்கச் சொல்கிறீர்கள் ?
ஒரு சாதாரணமான
இளம்பெண்ணின்
கனவுகளும் ஆசைகளும்தான்
எனக்கும் இருக்குமென்று
தப்பான தராசில்
எடைபோட்டு விட்டீர்கள் .
சில்லறை வலைகளுக்குள்
நான் சிக்கி விடுவேனென்று
சின்னதொரு வட்டத்தினுள்
சிந்தித்ததனால்
இந்த மீனை
நீந்த வேண்டாமென்று
நிர்ப்பந்திக்கிறீர்கள்.
அன்புப் பெற்றோரே ,
என் எண்ணத்தின்
விண்ணப்பத்தை
கொஞ்சம்
செவி சாய்த்துக் கேளுங்கள் .
நான்
ஒரு இலட்ச்சியப் பெண்ணாக
உருமாறப் போகிறேன் .
நான்
மண்ணில் பிறந்ததை
அடையாளப்படுத்த வேண்டும் .
நாளைய சந்ததி
வரலாற்றுப் புத்தகத்தில்
என் வாழ்க்கையையும்
படிக்க வேண்டும் .
ஒரு இந்திரா காந்தி போல் ,
ஒரு மேரி கியூரி போல்
நானும்
வாழ்ந்த வாழ்க்கையை
அடையாளப்படுத்திக்கொள்ள
ஆசைப்படுகிறேன் .
என் பெற்றோரே ,
என் பாதையைக் கொஞ்சம்
திறந்து தாருங்கள் .
நான் உல்லாசமாய்
பயணிக்கப் போகின்றேன் .
2002