எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Tuesday, June 28, 2011

என் அன்புப் பெற்றோருக்கு ..


இது  நான்  A/L  பரீட்சை  முடிந்தபின்  ஆங்கில  வகுப்பொன்றுக்கு  சென்று  ஒரு  நியாயமான  காரணத்துக்காக  சற்றுத்  தாமதமாக  வந்ததற்காக  என்  பெற்றோர் , குறிப்பாக  என்  தாய்  என்னிடம்  “எங்கே  போனாய் ?” என்று  கேட்ட  அந்த  ஒரே  ஒரு  கேள்வியின்  வார்த்தைகளுக்காகவல்ல , அது  கேட்கப்பட்ட  பாணியில்  நான்  இதயம்  உடைந்து  தேம்பித்  தேம்பி  அழுது  தீர்த்தபின்  எழுதுயது.

நான் 
அழுத  கண்ணீர் 
சத்தமின்றி 
அடங்கிப்  போகிறது .

உலகையே  எனக்குள் 
குடியமர்த்தத்  துடித்த 
என்  மனதை 
கேள்விக்கணையால் 
குத்திக்  கிழித்துவிட்டீர்களே .

நான்  பல  யுகங்களை 
விலைக்குவாங்கத்  துடிக்கிறேன் .
என்  பெற்றோரே , - நீங்கள் 
ஏன்  என்னை 
பாடப்  புத்தகத்துக்குள் 
பத்திரப்படுத்தப் பார்க்கிறீர்கள்  ?

என்  இலட்சியங்கள் 
உயர்வானவை .
நான்  வானத்தை  அளந்து 
வான்முகிலாக 
ஆசைப்படுகிறேன்.
நீங்களோ 
கூட்டுக்  கிளிபோல 
என்னை 
குறுகச்  சொல்கிறீர்கள் .

“ நீ  பெண்  பிள்ளை ”
உங்கள்  தலைமுறையில் 
நீங்கள்   கேட்ட
அதே  வார்த்தையை 
உங்கள்  பிள்ளையிடம் 
அப்படியே  ஒப்புவிக்கிறீர்களே ,
இதுவென்ன  நியாயம் ?

நான்  பறக்க  விரும்புகிறேன் .
சிறகுகளைத்  தரவேண்டிய  நீங்களே 
எனையேன் 
சிறையிருக்கச்  சொல்கிறீர்கள் ?

ஒரு  சாதாரணமான  
இளம்பெண்ணின் 
கனவுகளும்  ஆசைகளும்தான் 
எனக்கும்  இருக்குமென்று 
தப்பான  தராசில் 
எடைபோட்டு  விட்டீர்கள் .

சில்லறை  வலைகளுக்குள் 
நான்  சிக்கி  விடுவேனென்று 
சின்னதொரு  வட்டத்தினுள் 
சிந்தித்ததனால் 
இந்த  மீனை 
நீந்த  வேண்டாமென்று 
நிர்ப்பந்திக்கிறீர்கள்.

அன்புப்  பெற்றோரே ,
என்  எண்ணத்தின் 
விண்ணப்பத்தை 
கொஞ்சம் 
செவி  சாய்த்துக்  கேளுங்கள் .

நான்
ஒரு  இலட்ச்சியப்  பெண்ணாக 
உருமாறப் போகிறேன் .

நான்
மண்ணில்  பிறந்ததை 
அடையாளப்படுத்த  வேண்டும் .
நாளைய  சந்ததி 
வரலாற்றுப்  புத்தகத்தில்  
என்  வாழ்க்கையையும் 
படிக்க  வேண்டும் .

ஒரு  இந்திரா  காந்தி  போல் ,
ஒரு  மேரி  கியூரி  போல்
நானும் 
வாழ்ந்த  வாழ்க்கையை 
அடையாளப்படுத்திக்கொள்ள 
ஆசைப்படுகிறேன் .

என்  பெற்றோரே ,
என்  பாதையைக்  கொஞ்சம் 
திறந்து  தாருங்கள் .
நான்  உல்லாசமாய் 
பயணிக்கப்  போகின்றேன் .

2002

Post Comment

வேண்டும் வேண்டும்

விடியாத  இரவொன்று  வேண்டும்  – அதில் 
விழிக்காமல்  துயில் கொள்ள  வேண்டும் .
கனவுக்குள்  கவிபாட  வேண்டும் - அந்தக் 
களிப்பில்  நான்  துயில்  கொள்ள  வேண்டும் .

இதயங்கள்  உறவாடும்  கேண்மை  வேண்டும்
இதழினிலே  வாய்மைத்  தீ  கனல  வேண்டும் .
செறிவான  நாவண்மை   வேண்டும்  – நெஞ்சின் 
செழிப்பான  கனவெல்லாம்  கைகூட  வேண்டும் .

பூமியிலும்  எண்  மடங்கு  பொறுமை  வேண்டும் .
நேற்றலர்ந்த  மலரினிலும்  புதுமை  வேண்டும் .
துரோகமுள்ள  தோழமையோ  ஒழிய  வேண்டும் .
இதழினிலே  இதயம்  காணும்  வலிமை  வேண்டும் .

வெடுக்கென்ற  கோபங்கள்  குறைய  வேண்டும் .
அடிக்கின்ற  காற்றோடு  கரைய  வேண்டும் .
சிரிக்கின்ற  இதழினிலே  இனிமை  வேண்டும் - அதில்
தெறிக்கின்ற  தேன்துளியை  பருக  வேண்டும் .

காதலனை  களவாடும்  கண்கள்  வேண்டும் .
கனவினிலும்  அவன்  நிழலாய்  வாழ  வேண்டும் .
சின்னச்  சின்ன  ஊடலிலே  சிணுங்க வேண்டும் .
சிற்றுளியால் அவன்  பெயரை  செதுக்க  வேண்டும் .

குளிரான  மலையோரம்  ஒதுங்க  வேண்டும் .
குளிர்காய  என்  தோழன்  அருகில்  வேண்டும் .
கரையோர  அலையேறிக்  குதிக்க  வேண்டும் .
கடலுக்குள்  நான்  சென்று  குளிக்க  வேண்டும் .

சிறு  குளத்தில்  தாமரைப்பூ  பறிக்க  வேண்டும் .
என்  சிறுகுழலில்  சூட்டிவைத்து  ரசிக்க  வேண்டும் .
தூண்டிலிட்டு  மீனொன்றை   பிடிக்க  வேண்டும்  – அதை 
சூரியனில்  காயவைத்து  சுவைக்க  வேண்டும்.

திருட்டிருட்டில்  பதுங்கியே  நான்  விழிக்க  வேண்டும் .
இதழ் விரிக்கும் மலரினை நான் ரசிக்க வேண்டும் .
துயிலுகின்ற என்  விழியை  எழுப்ப  வேண்டும்   – மீண்டும் 
துயில்  கொள்ளத்  தாலாட்டுப்  பாடவேண்டும்.

2002

Post Comment

Wednesday, June 22, 2011

BROKEN WINGS - ஒரு மொழிமாற்றம் - பதிப்பு 2

 முறிந்த  சிறகுகள் 

முன்னுரை
 
காதல்   தன்னுடைய  மந்திரக்  கதிர்களால்  என்  கண்களைத்  திறந்து , அதன்  அக்கினி  விரல்களால்  முதன்முறையாக  என்  ஆத்மாவை  தொட்டபோது  எனக்கு  பதினெட்டு  வயது . தன்னுடைய  அழகினால்  என்  ஆத்மாவை  எழுப்பி  நாட்கள்  கனவுகளாகவும்  இரவுகள்  கொண்டாட்டங்களாகவும் கழிகின்ற  பேரன்பு  என்னும்  தோட்டத்துக்குள்  என்னை  இட்டுச்  சென்ற  முதல்  பெண்மணிதான்  'செல்மா  கெராமி'.

தன்னுடைய  சொந்த  அழகின்  முன்னுதாரணத்தினால்  எனக்கு  அழகை  ஆராதிக்க  கற்றுத்  தந்தவளும் , தன்னுடைய  ஆழமான  அன்பினால் , காதலின்  ரகசியங்களை  வெளிப்படுத்தியவளும்  செல்மா  கெராமிதான்; அவள்தான்  நிஜ  வாழ்க்கை  என்னும்  கவிதையை  முதன்முதலாக  எனக்கு  பாடிக்காட்டியவள் .

ஒவ்வொரு வாலிபனும்  தன்னுடைய  முதல்  காதலை  ஞாபகித்து   அந்த  புதுமையான  மணித்துளிகளின்  உணர்வுகளை  மீட்டிப்  பார்க்க  முயற்சிக்கிறான். அந்த  ஞாபகங்கள்தான்  அவனுடைய  ஆழமான  காயங்களை  மாற்றி  அதன்  மர்மங்களின்  கசப்புத்தன்மையை  புறந்தள்ளிவிட்டு அவனை  ஒரு  மகிழ்ச்சிமிக்கவனாய்  ஆக்கி   விடுகிறது . ஒவ்வொரு  வாலிபனின்  வாழ்க்கையிலும்  அவனுடைய  வசந்த  காலத்தில்    திடீரெனத்    தோன்றி   அவனுடைய  தனிமையை  சந்தோசமான  பொழுதுகளாய்   உருமாற்றி   அவனுடைய  இரவுகளின்  அமைதியை   சங்கீதத்தால்  நிரப்பக்கூடிய   ஒரு  ‘செல்மாஇருக்கிறாள் . ‘காதல்செல்மாவின்  உதடுகளினூடாக   என்  காதுகளுக்குள்   கிசுகிசுக்கப்   பட்டபோது, நான்  எண்ணங்களுக்குள்   ஆழமாக  ஊடுருவி  நிஜ  உலகத்தின்  பொருளையும், வேத நூல்களின் ஆச்சரியமான   உண்மைகளையும்  தேடினேன்  . செல்மா  ஒரு  ஒளித்தூணாக   என்  வாழ்வில் வருமுன், என்னுடைய   வாழ்க்கை  ஒரு  அரை மாத்திரையையும், சுவர்க்கத்தில்   ஆதாமுடையதைப்போன்று    வெறுமையையும்    இருந்தது. என்னுடைய  இதயத்தை  இரகசியங்களாலும்   அற்புதங்களாலும்   நிரப்பி, வாழ்க்கையின்   பொருளை   எனக்குப்   புரியச்   செய்த   என்  இதயத்தின்  ஏவாள்  அவள்தான் .

முதல்  ஏவாள்  தன்னுடைய  சொந்த  ஆசையினால்  ஆதாமை  சுவர்க்கத்திலிருந்தும்  வெளியேற்றினாள். செல்மா  அவளுடைய  இனிமையாலும்  காதலாலும்  தூய  காதல்  என்னும்  சுவர்க்கத்திற்குள்  என்னை  விரும்பி  நுழைய  வைத்தாள். ஆனால், முதல்  மனிதனுக்கு  என்ன  நடந்ததோ  அது  எனக்கும்  நடந்தது . ஆதாமை  சுவர்க்கத்திலிருந்து  விரட்டியடித்த  அந்த  கொடிய  சொல்  போன்றதொன்றுதான்  , அதன்  தகதகக்கும்  விளிம்புகளால்  என்னை  பயமுறுத்தி , எந்தக்  கட்டளைக்கும்  மாறு  செய்யாமலேயே , எந்தத்  தடுக்கப்பட்ட  மரத்தின்  பழத்தையும்  சுவைக்காமலேயே  என்னுடைய  காதல்   சுவர்க்கத்திலிருந்து  என்னை  பலவந்தமாக  வெளியேற்றியது .

இன்று , பல  வருடங்கள்  கடந்தபின்  கண்ணுக்குத்  தெரியாத  சிறகுகளாக  என்னைச்  சுற்றிப்  பறந்துகொண்டு , என்  இதயத்தின்  ஆழத்தை  துன்பங்களால்  நிரப்பி , என்  கண்களை  கண்ணீரால்  குளிப்பாட்டும்  ஆறாத  காயங்களைத்  தவிர  அந்த  அழகான  கனவில்  என்னிடம்  எதுவுமே  மீதமில்லை . என்  பேரன்புக்குரிய  செல்மா  இறந்துவிட்டாள். என்னுடைய  உடைந்துபோன  இதயத்தையும் , சைப்ரஸ்  மரங்களினால்  சூழப்பட்ட  அவளது  கல்லறையையும்  தவிர  அவளை  ஞாபகப்படுத்த  எதுவுமே  இல்லை . அந்தக்  கல்லறையும்  இந்த  இதயமும்தான்  அவளுக்கு  சாட்சியாக  எஞ்சியிருக்கின்றன

 மயானத்தின் அமைதி , கல்லறைகளின்  இருட்டில்  இருக்கும்  கடவுளின்  ரகசியத்தை  வெளிப்படுத்துவதில்லை . உடம்பின்  சாற்றை உறுஞ்சிக்  குடிக்கும்  மரக்கிளைகளின்  அசைவுகளின்  சப்தம்  புதைகுழியின்   மர்மங்களை  வெளியே  சொல்வதில் . என்  இதயம்  தன்   கொடூரமான  வலிகளின்  பெருமூச்சுக்களால் , காதல் , அழகு , மற்றும்  மரணம்  ஆகியவற்றின்  நாடகங்களை  வாழ்க்கைக்கு  அறிவிக்கிறது .
      
பியுரட்  நகரில்  பரந்திருக்கும்  என்  இளைய  நண்பர்களே , பைன் காடுகளுக்கு  அருகில்  உள்ள  அடக்கஸ்தலங்களை  நீங்கள்  கடக்கும்போது  அமைதியாக நுழையுங்கள் . மயானத்தின்  அமைதியை  உங்கள்  காலடிச்  சப்தங்களால்  கலைத்து  விடாமல்  மெல்ல  நடங்கள் . செல்மாவின்  கல்லறையடியில்  பணிவுடன்  நின்று  அவளை மறைத்து  வைத்திருக்கும் மண்ணுக்கு  வந்தனம்  செய்து  ஒரு  ஆழமான  பெருமூச்சுடன்  என்  பெயரை  உச்சரித்து  “ இங்கேதான்  கடல்களுக்கப்பால் காதலின்  கைதியாக  வாழ்ந்துகொண்டிருக்கும்  ஜிப்ரானுடைய  எல்லா  நம்பிக்கைகளும்  புதைக்கப்பட்டிருக்கின்றன . இந்த  இடத்தில்தான் , அவன்  தன்னுடைய  சந்தோசங்களை  தொலைத்தான் , கண்ணீரை   வடித்தான்புன்னகையை  மறந்தான்என்று  உங்களுக்குள்ளேயே  சொல்லிக்  கொள்ளுங்கள் .

அந்தக்  கல்லறையடியில்  சைப்ரஸ்  மரங்களோடு  சேர்ந்து , ஜிப்ரானின்  துன்பங்களும்  வளர்கிறது .  நேற்று  வாழ்க்கையின்  உதடுகளில்  ஒரு   அழகான  ராகமாகவிருந்து , இன்று  பூமியின்  மார்பில்  ஒரு  மௌனமான  ரகசியமாய்  புதைந்துபோன  செல்மாவின்  இழப்பிற்காக  ஒவ்வொரு  இரவும்  வேதனைகளோடும்  ஏமாற்றங்களோடும்  மரக்  கிளைகளோடு  இணைந்து  அவளை  ஞாபகித்துக்கொண்டு  அந்தக்  கல்லறைக்கு  மேலாக  இவனுடைய  ஆத்மா  பறந்துகொண்டிருக்கிறது .

என்னைப்  போல்  வேதனைகளை  சுமந்துகொண்டிருக்கும்  நண்பர்களேஉங்கள்  காதலிகளின்  பெயரில்  உங்களிடம்  ஒன்று  வேண்டுகிறேன் . என்னுடைய  நேசத்துக்குரிவளின்  கைவிடப்பட்ட  கல்லறையில்  ஒரு  மலர்  வளையம்  வையுங்கள் . நீங்கள்  செல்மாவின்  கல்லறையில்  வைக்கின்ற  மலர்கள்  ஒவ்வொன்றும்  நாணம்கொண்ட  ரோஜாவின்  இதழ்களில்  விழுகின்ற  விடியலுக்கான  பனித்துளிகளாயிருக்கும்.


தொடரும்....

Post Comment