எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Monday, August 15, 2011

யார் இந்த மர்ம மனிதர்கள் (Grease men )???....

அண்மைக்காலமாக இலங்கை முழுவதும் பரபரப்பாய்  பேசப்பட்டுக் கொண்டிருக்கும் கிரீஸ் மனிதர்களைப் பற்றிய சின்னதொரு அலசலும் என் எண்ணங்களின் பதிதலும்தான் இது.

ஜூலை மாதத்தின் இறுதிப் பகுதியில்தான் உடல் முழுவதும் கிரீஸ் பூசிய  இந்த மர்ம மனிதர்களின் நடமாட்டமும் அட்டூழியங்களும் ஆரம்பித்ததாய் கூறப்படுகிறது. அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம், வரிப்பத்தாஞ்சேனை பகுதிகளில்தான் இது ஆரம்பித்ததாக சொல்கிறார்கள். பின் நாட்டின் மத்திய பிரதேசத்துக்கும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் விஷ்தீரனமாயுள்ளது.

அது சரி, யார் இந்த மர்ம மனிதர்கள், எதற்காக வருகிறார்கள் என்ற கேள்விகளுக்கு விடை சொல்ல வேண்டுமில்லையா? யாருக்குங்க தெரியும்? நானே ஆடிக்கொருக்கா ஆவணிக்கொருக்கா என்றுதான் செய்தி பார்ப்பன், எனக்கெப்படி இதெல்லாம் தெரியப் போகுது? திடீர்னு ஒருநாள் ஒரு வானொலியில பத்திரிகை வாசிக்கிற காலை நிகழ்ச்சியொன்றில் (வெற்றி FM- விடியல்) தான் முதல் முறையாக இந்த மர்ம மனிதர்களைப்  பற்றி கேள்விப்பட்டேன். அதற்குப் பிறகுதான் யாருப்பா இவங்க என்கிற எண்ணம் எனக்கு வந்தது.

இணையத்தில்  தேடித் பார்த்தேன்.ஒரு வலைத் தளத்தில் இறக்காமம், வரிப்பத்தாஞ்சேனை சம்பவங்கள விளக்கமா போட்டிருந்தாங்க. ஆண்கள் இல்லாத வீடுகளுக்கு சென்று அங்குள்ள பெண்களை தாக்க முயற்சிப்பதாக சொல்லப்பட்டது. அவர்களை ஊரார் துரத்திப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த போது அவர்கள் ஏதோ ஒரு பொருளை பொலிஸாரிடம் காட்டியதும், பொலிஸார் அவர்களுக்கு சல்யுட் அடித்து விடுவித்ததாகவும் சொல்லப்பட்டது.

எந்த உலகத்துலடா  குற்றவாளிக்கு காவல்துறை சல்யுட் அடிக்கிறது? எல்லாம் மர்மமாத்தான் இருக்கு.. அதுமட்டுமில்லாம நாட்டின் பல பாகங்களிலும் ஒரே  நேரத்துல  இந்த சம்பவங்கள்  நடக்கிறதால  இத செய்யிறது  நிச்சயமா  ஒரு பெரிய  கூட்டமாத்தான்  இருக்கணும் . இதன் பின்புலத்துல பெரியதொரு சக்தியும் இருக்கணும் என்கிறது தெள்ளத் தெளிவு. இது குறித்து  குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சொன்னதாக சொல்லப்படும் கருத்துக்களும் வியப்பா இருந்தது.

இப்படியிருக்க,  நாட்டின் பல பகுதிகளிலும்  இந்த மர்ம மனிதர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. அன்றாடம் பல அசம்பாவிதங்கள் நடப்பதும், மக்கள் துரத்துவதும், பிடிப்பதும், காவல்துறையிடம் ஒப்படைப்பதும், அவர்கள் யாருக்கும் தெரியாமல் விடுவிப்பதுமாயிருக்க நாட்டின் பல பகுதிகளிலும் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு, பொலிஸ் நிலையங்கள் தாக்கப் படுவதும், இரு தரப்பினரும் காயப்படுவதும்
வைத்தியசாலையில் அனுமதிக்கப் படுவதுமாய் ஏகப்பட்ட செய்திகள் அன்றாடம் வெளிவந்தவண்ணமிருந்தன.



என்னதான்  நடக்கும்  நடக்கட்டுமே   என்கிற மாதிரி சும்மா  இருக்கவும்  விடாம  மர்ம மனிதர்கள் உள்ளூருக்குள்ளும்  வர  ஆரம்பிச்சுட்டாங்க.  மூன்று நான்கு நாட்களுக்குமுன் சம்மாந்துறை பிரதேசத்தில் ஒரு பெண்மணியைத் தாக்கியவனை ஊரார்  துரத்திக்கொண்டு  வர, அவன்  காவல்  நிலையத்துக்குள்  ஓடி  ஒழிந்ததும், உடனே காவல் நிலைய மின் விளக்குகள் அணைக்கப்பட்டதும், அது பற்றி பொலிஸாரிடம் வினவ, அப்படி யாரும் வரவில்லை  என்று  அவர்கள் சொல்ல அந்தப் பிரதேசத்திலும் பிரச்சினை தொடங்கியது. ஊர் மக்கள் பொலிஸ் நிலையத்துக்கு கல்லெறிய, அவர்கள் கண்ணீர் புகையடிக்க, கிட்டத் தட்ட இரவு 2 மணி மட்டும் ஊரார் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டிருந்தனர்.

மற்றுமொரு சம்பவம் வாழைச்சேனையிலும்  இடம்பெற்றது. பிடிக்கப்பட்ட மர்ம மனிதரை பொலிஸாரிடம்  ஒப்படைத்த மக்கள் ஏதோ சந்தேகத்தில் அவனைக் காட்டுமாறு கேட்க அவர்கள் மறுத்தபோது, அங்கேயும்  கலவரம்  வெடித்தது. காயப்பட்டவர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது யாவரும் அறிந்ததே.

பொத்துவிலிலும் இப்படியான சம்பவம் நடைபெற்று கைகலப்பில் ஒரு குடிமகன் இறந்துபோனதும்கூட புதிதில்லை.

இப்படிப் பல சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க கல்முனை நகர்ப் பகுதியிலும் சாய்ந்தமருது, காரைதீவுப் பகுதிகளிலும் கிரீஸ் மனிதன் வந்ததாக பல தகவல்கள் பொசிந்தன. முந்த நாள் இரவு கல்முனைக்குடியில்  ஒரு பள்ளி வாசலில் பதுங்கியிருந்த கிரீஸ் மனிதனை மக்கள் துரத்த அவன் கூரைகளுக்கு மேல் பாய்ந்து மறைந்து போனதாகவும் கண்டவர்கள் சொன்னார்கள்.

நேற்றிரவு , கிரீஸ் மனிதன் மிக அருகில் வந்து விட்டான். எங்கள் வீட்டுக்கு அண்மையில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்றுப் பின்னேரமே நடமாட்டம் தெரிந்து மக்கள் தேடிச்  சென்றபோது, இடையிலேயே பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியர் ஒருவர் அப்படி யாரும் வர சாத்தியமில்லை என்று சொல்லி மக்களை தடுத்ததாக சொல்லப்பட்டது. நேற்றிரவு அந்தப் பாடசாலைக்கருகில் வசித்து வந்த ஒரு பெண்மணியின் கையில் கிரீஸ் மனிதனின் ஆயுதத்தால்  மூன்று கீறல்கள் செய்யப்பட்டதை அடுத்து   அப்பெண்  உடனடியாக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு இளைஞர்களெல்லாம்  அவனை தேடிச் சென்ற போதும் பிடிக்க முடியாமல் போய்விட்டது.

நான் அறிந்த வரையில் நடைபெற்றவற்றை இதுவரைக்கும் சொல்லியிருக்கிறேன். இன்னும் பல்வேறு சம்பவங்களும் நாட்டின் பல பகுதியிலும் நடைபெற்றிருக்கின்றன.

என்ன நான் கதை சொல்லி போரடிக்கேனா? என்ன செய்றது? சொன்னாத்தானே தெரியாதவங்களும் தெரிஞ்சுக்க முடியும்...
 

இப்படியான அசம்பாவிதங்கள் எத்தனையோ நடைபெற்ற போதும், அரசியல்வாதிகளும், சில ஊடகங்களும், மர்ம மனிதர்கள் என்று யாரும் இல்லை, பொய் வதந்திகள், கட்டுக் கதைகள் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

அப்படியென்றால்  இதையெல்லாம்  யார் செய்வது? அவன் திருடன், மனநோயாளி, யானை கணக்கெடுக்க வந்தவன், பூனை கணக்கெடுக்க வந்தவன் என்றுதான் எல்லாப் பெருந்தலைகளும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.  அதென்ன , எல்லாத்  திருடர்களும் , மனநோயாளிகளும்  ஒரே நேரத்தில் வரிந்து கட்டிக் கொண்டு  இறங்கி ஒரே வேலையை செய்வது? ஆச்சரியமாயில்லையா?



சரி, அப்படித்தான் அவன் மனநோயாளி, திருடன் என்றாலும் அவன் பொது மக்களுக்கு தொந்தரவு கொடுக்கும் நேரம் அவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டியது இவர்களுக்கு கடமை இல்லையா? பொதுமக்கள் அவ்வளவு கஷ்டப்பட்டு பிடித்துக் கொண்டு கொடுக்க பொறுப்பில்லாமல் அவர்கள் விட்டுவிட்டால்.அந்த மனநோயாளிகள் இன்னும் பலரை தாக்க மாட்டார்களா?

அதைவிட பொதுமக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் காவல்துறைதானே குற்றவாளிகளைக்  கண்டுபிடிக்க வேண்டும். அதைவிடித்து பிடிப்பவர்களை எங்களிடம் கொண்டு வந்து தாருங்கள் என்று கேட்டு விட்டு அவர்கள் சும்மா இருப்பது எப்படி நியாயம் ? 119 க்கு call எடுத்தபோதும் அவர்கள் வந்து சேர முக்கால் மணி நேரம் ஆனதாமே..

யார் மறுப்புரை தெரிவித்தபோதும், நிச்சயமாக இந்த மர்ம மனிதர்களின் அட்டூழியங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், பின் புலத்தில் யார் இருக்கிறார்கள்?, இவர்களின் அடிப்படை நோக்கம்தான்  என்ன?, இதனால் யாருக்கு என்ன லாபம்?, இது எதுவரைக்கும் நீடிக்கும்?, இதுபோன்ற இன்னும் பல கேள்விகள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இருக்கிறது.

யாரால் பதில் சொல்ல முடியும்?. . பொறுத்திருப்போம் காலம் என்ன பதில் சொல்கிறது என்று தெரிந்துகொள்ள.

Post Comment

4 comments:

Imran Saheer said...

கட்டுரை நன்றாக வந்துள்ளது... யார் இவர்கள் என்பதற்கு பல பதில்கள் வந்தாலும் நீங்கள் கூறியது போல பின்புலம் இல்லாமல் இருக்க முடியாது. காலம் கனியும் போது பதில் வரலாம். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நட்சத்திர வாழ்த்துக்களுடன்.

RIPHNAS MOHAMED SALIHU said...

நன்றி இம்ரான்.. உண்மை வெளிச்சத்துக்கு வந்து தானே ஆக வேண்டும்... பார்ப்போம்.. அல்லாஹ்தான் நம் சமுகத்தை பாதுகாக்க வேண்டும். அதுசரி, உங்கள் நட்சத்திர வாழ்த்து சூப்பராயிருக்கே.. அதுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்...

Mohamed Faaique said...

நல்லதொரு அலசல்..

கிரீஸ் மனிதன் பற்றிய என் பதிவு..

http://faaique.blogspot.com/2011/08/sri-lankan-super-hero.html

RIPHNAS MOHAMED SALIHU said...

@Mohamed Faaique :"நல்லதொரு அலசல்..

கிரீஸ் மனிதன் பற்றிய என் பதிவு..

http://faaique.blogspot.com/2011/08/sri-lankan-super-hero.html "

நன்றி நண்பரே.. உங்கள் பதிவையும் வாசித்தேன். நகைச்சுவையாக சொல்லியிருக்கிறீர்கள் அதன் மறுபக்கத்தில், தாக்கப்படும் அப்பாவிகளைப்பற்றியும். வருகைக்கும் தொடர்கைக்கும் நன்றி.. மீண்டும் வருக..

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன