காற்றே கொஞ்சம் வருவாயா ?
என் இமையை மெல்லத் திறப்பாயா ?
கண்ணில் மிதக்கும் கனவுகளை
என் காதலன் விழிக்குள் புதைப்பாயா ?
பேதை நெஞ்சின் காதலினை
நாயகனிடத்தில் உரைப்பாயா ?
நாவினால் மறுத்தவன் உரைத்தாலும் -என்
சாவிற்கு அழைத்ததாய் சொல்வாயா ?
ஈரமான நினைவுகளை
இனிக்க இனிக்கத் தந்தவனே -நெஞ்சில்
பாரமான சுமையாகி -எனை
பைத்தியம் ஆக்கினான் அறிவாயா ?
ஊண் உறக்கம் மறந்துவிட்டு
உயிர்தேடி அலைந்ததுவும் ,
நிம்மதியைத் தொலைத்துவிட்டு
நித்திரைக்காய்ப் புரண்டதுவும்,
எதை எதையோ இழந்துவிட்டு
அவன் நினைவால் வாடியதும்,
எடுத்தவனிடத்தில் உரைப்பாயா ?
என் உயிரை மீட்டுக் கொடுப்பாயா ?
அவன் விட்டுச்சென்ற சுவாசக்காற்றை
என் சுவாசப்பையில் திணிப்பாயா ?
காற்றே உன்னை கெஞ்சுகிறேன் .
ஈதென் கடைசி ஆசை செய்வாயா ?
2002
No comments:
Post a Comment
மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன