உயிரிலும்
உடலிலும்
ஒரு நூறு அம்புகள்
பாய்ந்தாலும்
இதயம் ஒருபோதும்
இடைவேளை எடுத்ததில்லை .
உணர்வுகளில்
ஒரு
சின்ன நகக் கீறல்
விழுந்தால்கூட
கல்லில் விழுந்துடையும்
கண்ணாடிக்குவளை போல
சில்லுச் சில்லாய்
சிதறுகிறது
என் இதயம் .
ஒரே ஒரு சொல்தான் .
ஓரிரு எழுத்துக்கள்தான்
ஆனபோதும்
உணர்வுகளின்
ஒவ்வொரு அணுக்களையும்
குத்திப் பெயர்க்கிறது .
அம்பு பட்டுத் துடிக்கும்
வெண்புறா போல
இதயத்தின்
உயிர் வலிகளில்
ஒரு பாசக் குருவி
நொந்து மடிகிறது .
அன்பு –
எல்லாருக்கும் பலம் .
எனக்கு மட்டும்
அது பலயீனம் .
என்
பலயீனங்களில்
அடிக்கடி
தோற்றுப் போனாலும்...
பாறையில் மோதி அடிபட்டு
அழுதுகொண்டே
திரும்பிப் போகும்
கடலலைகள் ,
அடுத்த வினாடியே
அனைத்தும் மறந்து
கரை தழுவும் வேகத்தில்
மறுபடியும் அடிபடுவதுபோல்,
எத்தனை முறை
உணர்வுகளில்
இரும்பு ஆணிகள்
ஏற்றப் பட்டாலும் ,
மீண்டும் மீண்டும்
கரை தழுவித் தோற்கிறது
என் இதய அலை.
No comments:
Post a Comment
மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன