மூச்சுக் காற்று
முடிந்துவிடும் பொழுது
இதயத்தின் கதவுக்கு
இறைவன் குத்தும்
இறுதி முத்திரை .
நமக்கான உணவு
தீர்ந்துவிடும் பொழுது
நம் இரைப்பையை பூட்டும்
ஒரு ஆமைப் பூட்டு .
நம்முடைய
கால்கள் ரெண்டும்
ஓய்ந்துவிடும் போது
அந்நியக் கால்கள் எட்டில்
அரங்கேறும் நடனம் .
நம் உயிரின் பேனா
உலகத் தாளில்
எழுதிய கவிதைக்கு
விருதுகள் பெறுவதற்காய்
விரைகின்ற பயணம் .
ஒவ்வொரு
உயிர்க்கூடும்
கட்டாயம் தரிசிக்க வேண்டிய
கடைசி நிமிடம் .
வரமாட்டேன் என்று
அழுது புரளும் உயிரும்
மரணத்தின் கைகள்
அணைத்துக்கொள்ளும் போது
அமைதியாய் ஏற்றுக்கொள்ளும் .
ஊசி பொறுக்கும் இடைவெளியில்தான்
உயிரும் மரணமும்
விலகியிருக்கிறது .
நம் உடலில்
நிழலை விடவும்
நெருக்கமாயிருப்பது
மரணம் .
எந்த இடம் ,
எந்த நேரம் ,
எந்த முறையில்
நம் உயிரின் கயிறு
அறுக்கப்படும் என்று
யாருக்கும் தெரியாது .
அது –
உயிரின் ரகசியம் .
அது புதைந்து கிடக்கும் இடம்
எங்கே என்று
புதைத்தவன் மட்டுமே
அறிவான் .
இறைவன் ஒரு
வேடிக்கைக்காரன் .
அந்த ரகசியத்தின்
திறப்பை
தன் சட்டை பையில்
போட்டு விட்டு ,
மரணத்தை மறந்துவிட்ட உயிர்களின்
எதற்காகவென்று தெரியாத
ஓட்ட ஆட்டங்களையும் ,
ஓய்வில்லாத் தேடல்களையும்
ரசித்துச் சிரிக்கிறான் அவன் .
No comments:
Post a Comment
மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன