விடியாத இரவொன்று வேண்டும் – அதில்
விழிக்காமல் துயில் கொள்ள வேண்டும் .
கனவுக்குள் கவிபாட வேண்டும் - அந்தக்
களிப்பில் நான் துயில் கொள்ள வேண்டும் .
இதயங்கள் உறவாடும் கேண்மை வேண்டும்
இதழினிலே வாய்மைத் தீ கனல வேண்டும் .
செறிவான நாவண்மை வேண்டும் – நெஞ்சின்
செழிப்பான கனவெல்லாம் கைகூட வேண்டும் .
பூமியிலும் எண் மடங்கு பொறுமை வேண்டும் .
நேற்றலர்ந்த மலரினிலும் புதுமை வேண்டும் .
துரோகமுள்ள தோழமையோ ஒழிய வேண்டும் .
இதழினிலே இதயம் காணும் வலிமை வேண்டும் .
வெடுக்கென்ற கோபங்கள் குறைய வேண்டும் .
அடிக்கின்ற காற்றோடு கரைய வேண்டும் .
சிரிக்கின்ற இதழினிலே இனிமை வேண்டும் - அதில்
தெறிக்கின்ற தேன்துளியை பருக வேண்டும் .
காதலனை களவாடும் கண்கள் வேண்டும் .
கனவினிலும் அவன் நிழலாய் வாழ வேண்டும் .
சின்னச் சின்ன ஊடலிலே சிணுங்க வேண்டும் .
சிற்றுளியால் அவன் பெயரை செதுக்க வேண்டும் .
குளிரான மலையோரம் ஒதுங்க வேண்டும் .
குளிர்காய என் தோழன் அருகில் வேண்டும் .
கரையோர அலையேறிக் குதிக்க வேண்டும் .
கடலுக்குள் நான் சென்று குளிக்க வேண்டும் .
சிறு குளத்தில் தாமரைப்பூ பறிக்க வேண்டும் .
என் சிறுகுழலில் சூட்டிவைத்து ரசிக்க வேண்டும் .
தூண்டிலிட்டு மீனொன்றை பிடிக்க வேண்டும் – அதை
சூரியனில் காயவைத்து சுவைக்க வேண்டும்.
திருட்டிருட்டில் பதுங்கியே நான் விழிக்க வேண்டும் .
இதழ் விரிக்கும் மலரினை நான் ரசிக்க வேண்டும் .
துயிலுகின்ற என் விழியை எழுப்ப வேண்டும் – மீண்டும்
துயில் கொள்ளத் தாலாட்டுப் பாடவேண்டும்.
2002
No comments:
Post a Comment
மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன