மனங்களுக்குள்
அத்துமீறிப் புகுந்து
சந்தோஷப் பூந்தோட்டங்களையும்
நிம்மதிப் பஞ்சு மெத்தைகளையும்
கொளுத்தி விட்டுப் போவது
சந்தேகத் தீக்குச்சி .
அமைதியான ஒரு குளத்தில்
கல்லெறிந்துவிட்டுப் போகிறது அவை .
ஆழமான உறவுகளுக்கிடையே
அரக்கனாய்ப் புகுந்து
அந்த
ஆத்மார்த்த பந்தங்களின்
சுவர்களை
துண்டு துண்டாய்ப் பெயர்க்கிறது .
சந்தோசப் பூந்தோப்பில்
எச்சங்களைப் போட்டு
அழகான பூக்களின்
நறுமணத்தையெல்லாம்
பிணவாடையாக்கி விடுகிறது.
மண்ணுக்குள்ளே இருந்துகொண்டே
கூரை வளைகளை அரித்துவிடும்
கறையான்களைப் போல ,
மனதின்
ஒரு மூலையில் இருந்துகொண்டே
மூளை நரம்புகளை
முறுக்கிப் பிழியும்
அபூர்வமான
அழிக்கும் சக்தி கொண்ட
அணுகுண்டு அது .
எத்தனை உறவுகளின்
பாலங்களை
அஸ்திவாரத்தோடு
பிடுங்கியிருக்கிறது அவை .
எத்தனை உறவுகளை
இறுக்கிக் கட்டி வைத்திருக்கும்
நேசக் கயிற்றை
இழை இழையாய் பிரித்து
எறிந்திருக்கிறது .
எத்தனை காதல் இதயங்களில்
அமிலம் ஊற்றி
எரித்திருக்கிறது .
சந்தேகம்
ஒரு விஷக் கிருமி .
ஒரே ஒரு புள்ளியில்
உற்பத்தியாகி
உயிர் வரைக்கும் பரவும்
புற்று நோய் அது .
ஒரு நாற்றில் பிடிக்கும் பீடை
பல துண்டு வயல்களை
அழித்துவிடுவது போல் ,
ஒரு துண்டுத் தலைமயிரில்
தொடங்கி
ஒரு தலைமுறைக்கே உலை வைக்கும்
சந்தேகப் பூச்சி .
எங்களுக்கிடையில் நின்று
சந்தேகப் பேய்
தும்மினால் கூட
எங்கள் உறவுகளுக்குப் பிடிக்கும்
காச நோய் .
****
மனித உறவுகள்
மாணிக்கம் போன்றவை .
பொன்களை விடவும்
பெறுமதியானவை .
கண்களைப் போல
கண்ணுங் கருத்துமாய்
காப்பாற்ற வேண்டியவை .
அந்த
ஆத்ம பந்தங்களுக்கிடையில்
வேண்டாமே
இன்னொரு சகுனி.
****
சந்தேகத் தீயை
தீயிட்டுக் கொளுத்துவோம்.
உறங்கிப்போன உறவுகளை
நம்பிக்கை விளக்குகளில்
திரியிட்டு எழுப்புவோம்.
நாளை நம் உறவுகளில்
நட்சத்திரம் பூக்கட்டும்.
நம் ஆரத் தழுவல்களில்
நதிகளுக்கும் வேர்க்கட்டும் .
நாம்
கைகோர்த்துப் பாடும் பாடல்
அன்பின்
தேசியகீதம் ஆகட்டும்.
No comments:
Post a Comment
மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன