எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Thursday, June 9, 2011

வேறு முகங்கள்

ஒரு  பொழுதில் 
காற்றைப்  போல
பாரமில்லாமலும்,
இன்னொரு  பொழுதில்
கற்பாறையை  விட 
கனமானதாயும் 
இரட்டை  வேடம்  போடுகிறது 
என்  மனது.

ஒரு  பொழுதில்
பட்டாம்பூச்சிபோல 
சிறகு  விரித்து 
சுற்றித்  திரிகிறது .
இன்னொரு  பொழுதில்
கோழிக்  குஞ்சுபோல 
கூட்டுக்குள்ளேயே 
ஒதுங்கிக்  கொள்கிறது .

சில  வேளைகளில் 
என்  புன்னகைகளில் 
பூமியையே  வாங்குகிறேன் .
இன்னும்  சில  வேளைகளில்
கால் அங்குலப் புன்னகையைக்கூட 
கடன்  வாங்க  வேண்டியிருக்கிறது .

ஒரு  குழந்தையைப்  போல
மண்ணில்  புரண்டு,
கால்களை  உதறி,
அடம்  பிடிக்கிறேன் 
ஒரு  பொழுதில் .
இன்னொரு  பொழுதில்
ஒரு  புத்தனைப்  போல
கண்களை  மூடி
அமைதியான  புன்னகையுடன் 
எல்லாவற்றையுமே 
ஏற்றுக்  கொள்கிறேன் .

ஒரு  நேரம் 
வானம் , பூமி ,
கடல் , காற்று , மழை ,
கல் , முள் , கண்ணீர்  என்று 
எல்லாவற்றையுமே  ரசிக்கிறேன் .
இன்னொரு  நேரம்
மழலையின்  முத்தத்தில்கூட 
மகிழ்ந்திடாமலிருக்கிறேன்.

ஒரு  நேரம்
சொந்த  பந்தம்,
அண்டை  அயலார்,
நண்பன் , எதிரி , துரோகியென்று  
எல்லாரையும்  நேசிக்கிறேன். 
இன்னொரு  நேரம்
பெற்ற  அன்னை  கூட
எனக்கு 
அந்நியமாய்த்  தெரிகிறாள் .

என்னாலேயே 
அவிழ்க்கமுடியாத 
பெரியதொரு 
முரண்பாடுகளின் 
முடிச்சு  நான் .

ஒப்பனையில்லாமலேயே 
ஓரங்க  நாடகம்  நடிக்கிறது 
என்  மனது.

வேஷம்  தரிக்காமலேயே 
வேறு  வேறாய்  அலைகிறது 
என்  உருவம் .

எனக்கு
நானே  ஒரு  புதிர்.

ஆனாலும் 
ஒன்று  மட்டும் 
உறுதியாய்ச்  சொல்வேன் .

எத்தனை  முகம்  காட்டினாலும் 
என்  அத்தனை  முகங்களிலும் 
உண்மை  இருக்கிறது .


Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன