முறிந்த சிறகுகள்
முன்னுரை
காதல் தன்னுடைய மந்திரக் கதிர்களால் என் கண்களைத் திறந்து , அதன் அக்கினி விரல்களால் முதன்முறையாக என் ஆத்மாவை தொட்டபோது எனக்கு பதினெட்டு வயது . தன்னுடைய அழகினால் என் ஆத்மாவை எழுப்பி நாட்கள் கனவுகளாகவும் இரவுகள் கொண்டாட்டங்களாகவும் கழிகின்ற பேரன்பு என்னும் தோட்டத்துக்குள் என்னை இட்டுச் சென்ற முதல் பெண்மணிதான் 'செல்மா கெராமி'.
தன்னுடைய சொந்த அழகின் முன்னுதாரணத்தினால் எனக்கு அழகை ஆராதிக்க கற்றுத் தந்தவளும் , தன்னுடைய ஆழமான அன்பினால் , காதலின் ரகசியங்களை வெளிப்படுத்தியவளும் செல்மா கெராமிதான்; அவள்தான் நிஜ வாழ்க்கை என்னும் கவிதையை முதன்முதலாக எனக்கு பாடிக்காட்டியவள் .
ஒவ்வொரு வாலிபனும் தன்னுடைய முதல் காதலை ஞாபகித்து அந்த புதுமையான மணித்துளிகளின் உணர்வுகளை மீட்டிப் பார்க்க முயற்சிக்கிறான். அந்த ஞாபகங்கள்தான் அவனுடைய ஆழமான காயங்களை மாற்றி அதன் மர்மங்களின் கசப்புத்தன்மையை புறந்தள்ளிவிட்டு அவனை ஒரு மகிழ்ச்சிமிக்கவனாய் ஆக்கி விடுகிறது . ஒவ்வொரு வாலிபனின் வாழ்க்கையிலும் அவனுடைய வசந்த காலத்தில் திடீரெனத் தோன்றி அவனுடைய தனிமையை சந்தோசமான பொழுதுகளாய் உருமாற்றி அவனுடைய இரவுகளின் அமைதியை சங்கீதத்தால் நிரப்பக்கூடிய ஒரு ‘செல்மா' இருக்கிறாள் . ‘காதல் ’ செல்மாவின் உதடுகளினூடாக என் காதுகளுக்குள் கிசுகிசுக்கப் பட்டபோது, நான் எண்ணங்களுக்குள் ஆழமாக ஊடுருவி நிஜ உலகத்தின் பொருளையும், வேத நூல்களின் ஆச்சரியமான உண்மைகளையும் தேடினேன் . செல்மா ஒரு ஒளித்தூணாக என் வாழ்வில் வருமுன், என்னுடைய வாழ்க்கை ஒரு அரை மாத்திரையையும், சுவர்க்கத்தில் ஆதாமுடையதைப்போன்று வெறுமையையும் இருந்தது. என்னுடைய இதயத்தை இரகசியங்களாலும் அற்புதங்களாலும் நிரப்பி, வாழ்க்கையின் பொருளை எனக்குப் புரியச் செய்த என் இதயத்தின் ஏவாள் அவள்தான் .
முதல் ஏவாள் தன்னுடைய சொந்த ஆசையினால் ஆதாமை சுவர்க்கத்திலிருந்தும் வெளியேற்றினாள். செல்மா அவளுடைய இனிமையாலும் காதலாலும் தூய காதல் என்னும் சுவர்க்கத்திற்குள் என்னை விரும்பி நுழைய வைத்தாள். ஆனால், முதல் மனிதனுக்கு என்ன நடந்ததோ அது எனக்கும் நடந்தது . ஆதாமை சுவர்க்கத்திலிருந்து விரட்டியடித்த அந்த கொடிய சொல் போன்றதொன்றுதான் , அதன் தகதகக்கும் விளிம்புகளால் என்னை பயமுறுத்தி , எந்தக் கட்டளைக்கும் மாறு செய்யாமலேயே , எந்தத் தடுக்கப்பட்ட மரத்தின் பழத்தையும் சுவைக்காமலேயே என்னுடைய காதல் சுவர்க்கத்திலிருந்து என்னை பலவந்தமாக வெளியேற்றியது .
இன்று , பல வருடங்கள் கடந்தபின் கண்ணுக்குத் தெரியாத சிறகுகளாக என்னைச் சுற்றிப் பறந்துகொண்டு , என் இதயத்தின் ஆழத்தை துன்பங்களால் நிரப்பி , என் கண்களை கண்ணீரால் குளிப்பாட்டும் ஆறாத காயங்களைத் தவிர அந்த அழகான கனவில் என்னிடம் எதுவுமே மீதமில்லை . என் பேரன்புக்குரிய செல்மா இறந்துவிட்டாள். என்னுடைய உடைந்துபோன இதயத்தையும் , சைப்ரஸ் மரங்களினால் சூழப்பட்ட அவளது கல்லறையையும் தவிர அவளை ஞாபகப்படுத்த எதுவுமே இல்லை . அந்தக் கல்லறையும் இந்த இதயமும்தான் அவளுக்கு சாட்சியாக எஞ்சியிருக்கின்றன .
மயானத்தின் அமைதி , கல்லறைகளின் இருட்டில் இருக்கும் கடவுளின் ரகசியத்தை வெளிப்படுத்துவதில்லை . உடம்பின் சாற்றை உறுஞ்சிக் குடிக்கும் மரக்கிளைகளின் அசைவுகளின் சப்தம் புதைகுழியின் மர்மங்களை வெளியே சொல்வதில் . என் இதயம் தன் கொடூரமான வலிகளின் பெருமூச்சுக்களால் , காதல் , அழகு , மற்றும் மரணம் ஆகியவற்றின் நாடகங்களை வாழ்க்கைக்கு அறிவிக்கிறது .
பியுரட் நகரில் பரந்திருக்கும் என் இளைய நண்பர்களே , பைன் காடுகளுக்கு அருகில் உள்ள அடக்கஸ்தலங்களை நீங்கள் கடக்கும்போது அமைதியாக நுழையுங்கள் . மயானத்தின் அமைதியை உங்கள் காலடிச் சப்தங்களால் கலைத்து விடாமல் மெல்ல நடங்கள் . செல்மாவின் கல்லறையடியில் பணிவுடன் நின்று அவளை மறைத்து வைத்திருக்கும் மண்ணுக்கு வந்தனம் செய்து ஒரு ஆழமான பெருமூச்சுடன் என் பெயரை உச்சரித்து “ இங்கேதான் கடல்களுக்கப்பால் காதலின் கைதியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஜிப்ரானுடைய எல்லா நம்பிக்கைகளும் புதைக்கப்பட்டிருக்கின்றன . இந்த இடத்தில்தான் , அவன் தன்னுடைய சந்தோசங்களை தொலைத்தான் , கண்ணீரை வடித்தான், புன்னகையை மறந்தான் ” என்று உங்களுக்குள்ளேயே சொல்லிக் கொள்ளுங்கள் .
அந்தக் கல்லறையடியில் சைப்ரஸ் மரங்களோடு சேர்ந்து , ஜிப்ரானின் துன்பங்களும் வளர்கிறது . நேற்று வாழ்க்கையின் உதடுகளில் ஒரு அழகான ராகமாகவிருந்து , இன்று பூமியின் மார்பில் ஒரு மௌனமான ரகசியமாய் புதைந்துபோன செல்மாவின் இழப்பிற்காக ஒவ்வொரு இரவும் வேதனைகளோடும் ஏமாற்றங்களோடும் மரக் கிளைகளோடு இணைந்து அவளை ஞாபகித்துக்கொண்டு அந்தக் கல்லறைக்கு மேலாக இவனுடைய ஆத்மா பறந்துகொண்டிருக்கிறது .
என்னைப் போல் வேதனைகளை சுமந்துகொண்டிருக்கும் நண்பர்களே , உங்கள் காதலிகளின் பெயரில் உங்களிடம் ஒன்று வேண்டுகிறேன் . என்னுடைய நேசத்துக்குரிவளின் கைவிடப்பட்ட கல்லறையில் ஒரு மலர் வளையம் வையுங்கள் . நீங்கள் செல்மாவின் கல்லறையில் வைக்கின்ற மலர்கள் ஒவ்வொன்றும் நாணம்கொண்ட ரோஜாவின் இதழ்களில் விழுகின்ற விடியலுக்கான பனித்துளிகளாயிருக்கும்.
தொடரும்....
No comments:
Post a Comment
மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன