என்னைப்
பெண்பார்த்துவிட்டுப்போன
என் வருங்காலக் கணவனே (???),
நீ
வருகிறாய் என்று
என் வீட்டில்
எத்தனை தடபுடல்கள் .
இந்த ஏற்பாடாவது
சரியாகிவிட வேண்டுமென்று
என் பெற்றோரின் நெஞ்சில்
ஆயிரம் ஏக்கங்கள் .
கூரையைப் பிரித்து
தோரணம்
ஒன்றுதான்
போடாத குறை .
எங்கள் வரவேற்பில்
எந்தக் குறையும்
கண்டுவிடக் கூடாதென்பதில்
கவனமாயிருந்தார்கள் .
புளி போட்டுத் துலக்கிய
பித்தளைப் பாத்திரம்போல்
நான்
பளபளக்க வேண்டுமென்று ,
முதல் தரப் பட்டும்..
முகம் முடி ஒப்பனையும் ..
அப்பப்பா -
அழகாய்த்தான் இருந்தேன் .
உனக்கு அனுப்பவென்றே
நான்
பிரத்தியேகமாய்
எடுத்த
புகைப்படத்தைப் பார்த்து
என்னைப்
பிடித்துப்போனதால்தான்
நீ வருகிறாய் என்றார்கள் .
நானோ உன்னை
கனவிலும் கண்டதில்லை .
நீ -
வெள்ளையா கருப்பா ..
ஒல்லியா உடம்பா ..
எதுவுமே தெரியாது .
இருந்தாலும் பரவாயில்லை .
நானென்ன பெண்தானே .
என்னை -
முகம் தெரியாத
உனக்காக அலங்கரித்தேன் .
புத்தம்புது ஒப்பனையில்
பொன்னாக ஜொலித்தேன் .
புடவைக்கடை கொலுபொம்மையாய்
எடுப்பாய்த்தான் இருந்தேன் .
******
என் பெற்றோரின் முகத்தில்
எத்தனை கலவரங்கள் .
இந்தச் சம்பந்தமாவது
சரியாகிவிட வேண்டுமென்று
ஓயாத பரபரப்பு .
என் மனது
வறியவன் வீட்டுப்
பானைபோல
வெறுமையாய் இருந்தது .
இந்தப்
பெண்பார்க்கும் படலம்
எனக்கொன்றும் புதிதில்லை .
ஏமாற்றக் குளத்தில்
எத்தனை முறைதான்
மூழ்கி எழுவது ?
எத்தனை முறைதான்
என் எதிர்பார்ப்புகள்
எரிந்து சாம்பலாவது ?
நிறைகுடத்தைப்போல்
தளம்பாமலிருந்தது மனசு .
புகைப்படத்துக்குப் போல
மாப்பிள்ளைமாருக்கும்
புன்னகைத்துப் போஸ் கொடுத்து
பழகிவிட்டது எனக்கு .
வா ..
உயிருள்ள பொம்மையொன்று
உட்கார்ந்திருக்கின்றது .
பார்த்துவிட்டுப் போ என்று
எத்தனை பேருக்கு
காட்சி கொடுத்திருக்கிறேன் .
இந்தப்
பெண்பார்க்கும் படலம்
எனக்கொன்றும் புதிதில்லை .
******
நீ
வந்துவிட்டாய் என்று -உன்னிடம்
என்னை அழைத்துகொண்டுபோக
அடுத்த வீட்டுப் பெண்கள்
அவசரமாய் வந்தார்கள் .
மின்கலம் பூட்டிய
இயந்திர பொம்மையாய்
வழி தொடர்ந்தேன் நான் .
தேநீர்த் தட்டு
கையில் தரப்பட்டது .
உனக்குத்
தேநீர் தந்துவிட்டு
எதிரே வந்து
உட்கார வேண்டும் .
இதுதான் ஏற்பாடு .
நல்ல வேளை .
நீ
தனியாய்த்தான்
வந்திருந்தாய் .
இல்லாவிட்டால்
உன் நண்பனும் என்னை
இலவசமாய்ப் பார்த்திருப்பான் .
சொல்லித்தந்தது போல்
தலைகுனிந்தே நடந்து வந்து
தேநீர்த் தட்டை
நீட்டினேன் உன்னெதிரே.
நீ -
தேநீர்க்கோப்பையை
தொடும்போது ..
நம் கண்கள் நான்கும்
மோதிக்கொண்டன .
மின்சாரம் ஒன்று
பாய்ந்த்தது நெஞ்சிலே .
இதயம் வேகமாய்
அடித்துக் கொண்டது .
கைகளில் நடுக்கம் ,
இதழ்களில் துடிப்பு .
சமாளிக்கத் தெரியாமல்
தடுமாறிப் போனேன் .
நீ
பார்த்துக்கொண்டேதானிருந்தாய் .
அழுத்தமான பார்வை .
உதடுகளில்
மெல்லியதாய் ஒரு
புன்னகைக் கோடு .
நீ
அழகாய்த்தானிருந்தாய் .
திடமான தோள்கள் ..
துடிப்பான மீசை ..
நீ
அழகாய்த்தானிருந்தாய் .
அந்த
ஓரிரு வினாடிகள்
அத்தனை நீளமா ?
உன் எதிரே
நான் அமர்ந்தேன் .
நிமிர்ந்து உன்னை
நேராய்ப் பார்க்க
முடியவேயில்லை என்னால் .
நீ
அளவாகக் கதைத்தாய் .
இயல்பாக சிரித்தாய்
என் பெற்றோரோடு .
ஓரக்கண்ணால்
உன்னை பார்த்ததை
நீ
கண்டுவிட்டாய் .
ஐயோ ..
நாணத்தில்
நான் பட்ட அவஸ்தை !!
நான் நினைக்கிறேன்
நீதான்
எனக்கானவன் என்று .
என்னை
பிடித்திருக்கின்றது என்றோ
பிடிக்கவில்லை என்றோ
நீ – எதுவுமே
சொல்லவில்லை .
சொல்லியனுப்புகிறேன்
என்று
சொல்லிவிட்டுப்
போய்விட்டாய் .
******
திருமணம் என்பது
என்
பெற்றோரின் சுமைதீர்க்க -நான்
புரிந்துகொள்ளும்
ஒப்பந்தம் என்றுதான்
எண்ணியிருந்தேன் .
உன்னை பார்த்தபின்தான்
ஆசைக் கனவுகள்
அனலாய் சுட்டன .
******
இரண்டு மூன்று நாளாய்
உன் முடிவு வருமென்று
காத்திருந்தே
என் கனமான இதயம்
கரைந்துபோய் விட்டது .
இது
சரிவராவிட்டாலும் என்று
என் பெற்றோர்
இன்னொரு
பெண்பார்க்கும் நாடகத்தை
இன்றைக்கோ நாளைக்கோ
அரங்கேற்றப் பார்க்கிறார்கள் .
அவர்களைச் சொல்லி
குற்றமுமில்லை .
இன்னுமொருமுறை
முகச்சாயம் பூசி
தேநீர் கொடுக்க
என்னால்
முடியாதடா.
தயவுசெய்து
சம்மதமென்று
நீ
ஒரு வார்த்தை சொல்லிவிடு .
பெண்ணின் உடலில்
தசையும் எலும்பும்
மட்டுமில்லை .
தன்மானம் ஒன்றும்
உள்ளதென்று
நீ மட்டுமாவது
புரிந்துகொள்.
2011
2011
2 comments:
"நல்ல வேளை .
நீ
தனியாய்த்தான்
வந்திருந்தாய் .
இல்லாவிட்டால்
உன் நண்பனும் என்னை
இலவசமாய்ப் பார்த்திருப்பான் "
அருமை அருமை
உங்கள் கருத்துக் கிடைத்தது எனக்கு மிகப் பெரிய கௌரவமாக இருக்கிறது. மிக்க நன்றி.
Post a Comment
மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன